இளைஞர் குழு வீதியில் அட்டகாசம்; ஆசிரியர் காயம்

178 0

வவுனியா – மன்னார் பிரதான வீதியில், காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று, வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (17) இரவு 9 மணிக்கு பின்னர், சுமார் ஒரு மணி நேராமாக இந்த இளைஞர் குழுவினர் அவ்வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், வீதியின் குறுக்கே தமது மோட்டர் சைக்கிள்களை நிறுத்தியும் வைத்துள்ளனர்.  அவர்களது தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இதன்போது அந்த இளைஞர் குழுவினர், அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆசிரியர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா வைரவர் கோவில் வீதி, கதிரேசு வீதி மற்றும் மன்னார் வீதிகளில் அண்மைக்காலமாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.