23 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை

186 0

இருபத்திமூன்று இந்திய மீனவர்களும், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன், இன்று, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி, வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு, இன்று (15), பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, இந்திய மீனவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பின்வரும் தகவல்களை தெரிவித்தனர். அதாவது, இருபத்தி மூன்று பேரும், தாங்கள் வேண்டுமென்று, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை எனவும் அவர்களின்  இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதியதன் காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் படகு வந்துவிட்டதாகவும் இதனால் தம்மை மன்னித்து விடுதலை செய்யுமாறும்  கோரினர்.

இதனை ஏற்றுக்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை, இந்திய மீனவர்களின் இரண்டு டோலர்  படகு,  இழுவைமாடி, தொலைத்தொடர்பு சாதனம், எக்கோ சாதனம், ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், 23 பேருக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.