சஹ்ரானுடன் அவரது வீட்டில் சந்திப்பு நடத்திய குற்றப்புலனாய்வு அதிகாரி யார் – ஹரின்

251 0

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு லொறிகளையும் விடுவிக்க உத்தரவிட்ட பொலிஸ் பிரதானி யார்? தாக்குதல் இடம்பெற்ற தினம் அந்த பொலிஸ் அதிகாரி பாசிக்குடாவிக்கு யாருடைய பண வவுச்சரில் சென்றார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். அத்துடன் சஹ்ரானின் வீட்டில் அவருடன் சந்திப்பு நடத்திய புலனாய்வு அதிகாரி தொடர்பாகவும் வெளிப்படுத்தவேண்டும் என ஹரின் பெர்ணாடோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் கண்க்குகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை குழுவில் சாட்சியமளிக்கப்பட்ட பல விடயங்கள் அறிக்கையில் வெளிவரவில்லை. அவ்வாறான பல விடயங்களை நான் இந்த சபையில் வெளிப்படுத்தி இருக்கின்றேன்.

இதுதொடர்பாக விவாதிக்க அமைச்சர் சரத்வீரசேகரவை அழைத்திருந்தேன். அவர் அதற்கு தயார் இல்லை. அதனால் மேலுமொரு விடயத்தை தெரிவிக்கின்றேன். இந்த விடயங்கள் தொடர்பாக தேடிப்பார்க்கவேண்டும்.

2019 ஏப்ரல் 4ஆம் திகதி இரண்டு லாெறிகள் களனி கங்கை நுழைவாயிலில் கைதுசெய்யப்படுகின்றன. இந்த செய்தி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமாக தெரிவிக்கப்பட் விடயம். ஆனால் அறிக்கையில் வரவில்லை. பொய்யான கூற்று அல்ல. இதுதொடர்பாக கர்தினால் மெல்கம் ரன்ஜித்துக்கும் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

அதாவது, குறித்த லொறிகளில் என்ன இருந்தது. அந்த லொறிகளை விடுவிக்குமாறு தெரிவித்த பொலிஸ் அதிகாரி யார்? அந்த லொறி உரிமையாளர் யார் என்பது தொடர்பான சாட்சியம் தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கவேண்டும்.

அத்துடன் லொறிகளை விடுவிக்குமாறு தெரிவித்த குறித்த பொலிஸ் பிரதானி, குண்டு தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் பாசிக்குடாவில் ஹோட்டல் ஒன்றிலேயே இருந்தார். அவருக்கு ஹோட்டல் கட்டணம் யார் செலுத்தினார். அவர் யாருடைய பண வவுச்சரில் பாசி்க்குடா சென்றார் என்பது தொடர்பாக முடியுமானால் தேடிப்பார்த்து வெளியிடவேண்டும். இது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு தெரிவித்த சாட்சியங்களில் அறிக்கையில் வெளிவராத விடயங்களாகும்.

அதேபோன்று சஹ்ரானின் மனைவி விசாரணைக்குழுவுக்கு தெரிவித்த சாட்சியங்களை முடியுமானால் பாராளுமன்றத்துக்கு வெளிப்படுத்தவேண்டும். இலங்கையின் புலனாய்வு அதிகாரி சஹ்ரானுடன் அவரது வீட்டில் சந்தித்திருப்பதாக சஹ்ரானின் மனைவி பாத்திமா சாதியா சாட்சியமளித்திருக்கிறார்.

நான் தெரிவிப்பது பொய்யென்றால் முடியுமானால் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கவேண்டும். இந்த விடயங்களை தெரிவிப்பது எனது உயிருக்கு அச்சுறுத்தல் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அதனால் நான் தெரிவித்த விடயங்கள் தொடர்பாக தேடிப்பார்த்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்தவேண்டும். இந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மக்களின் சாபத்தில் இருந்து இந்த அரசாங்கத்துக்கு விடுபட முடியாது என்றார்.