பிரான்சில் இரண்டாம் நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021

383 0

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021 இரண்டாம் நாளாக இன்று ( 07.11.2021) ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் பகுதியில் இடம்பெற்றது.

நேற்று (06.11.2021) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான நந்தியார் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை, கவிதை ஆகியபோட்டிகள் இடம்பெற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் பகுதியில் மாவீரர் நினைவு சுமந்த பேச்சு போட்டிகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மாாவீரர் வண்ணன் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.

இதேவேளை, மாவீரர் நினைவு சுமந்த பாடல் போட்டி எதிர்வரும் (14.11.2021) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)