மாவட்டக் காரியாலயத்தை அம்பாறையில் திறக்கவும்

161 0

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள அலுவலகம், திருகோணமலையிலும், மாவட்டக் காரியாலயம் மட்டக்களப்பிலும் அமைந்துள்ளது.

இந்நிலையில், இறைவரி திணைக்கள மாவட்டக் காரியாலயத்தை, அம்பாறையிலும் திறக்குமாறு வலியுறுத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கு, அல்- மீஸான் பௌண்டஷன் – ஸ்ரீ லங்கா கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

அம்பாறை மாவட்ட வரியிருப்பாளர்கள், தமது வரியை செலுத்த அல்லது வரி தொடர்பிலான விடயங்களைக் கையாள திருகோணமலை அல்லது மட்டக்களப்பு காரியாலயத்தை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.

இதனால் மிக அதிக தூரம், பயணச் செலவுகள் மற்றும் நேர விரயம் என பல்வேறு அசௌகரியங்களை வரியிருப்பாளர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டக் காரியாலயத்தின் அவசியம் உணரப்படுவதால், மாகாண இறைவரித் திணைக்கள மாவட்ட அலுவலகம் ஒன்றை, அம்பாறை மாவட்டத்தில் அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதுடன், அக்காரியாலயத்தை நிறுவ பொருத்தமான இடமாக கல்முனையில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் (ஆயிரம் கால் கட்டடத்தொகுதி) உள்ள அறைகளைப் பயன்படுத்த முடியும்.

அல்லது அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய கட்டடங்கள் என அம்பாறையில் பாவனையில் இல்லாத பல கட்டடங்கள் உள்ளன. அவற்றை இந்தத் தேவைக்கு பயன்படுத்த முடியுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.