கிறிஸ்தவர்களும், இந்துக்களும் மக்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுவோம்- போப் பிரான்சிஸ் தீபாவளி வாழ்த்து

157 0

மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது, சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதிப்படுத்துகிறது என்று போப் பிரான்சிஸ் கூறி உள்ளார்.

உலகமெங்கும் உள்ள இந்து மதத்தினர் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைபீடமான வாடிகனில் போப் ஆண்டவர் நிர்வாகம், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்கள் கொண்ட வாழ்த்து செய்தியை வெளியிட்டது. அந்த வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

தற்போதைய பெருந்தொற்றுநோய், அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிகள் ஆகியவற்றில் இருந்து எழுகிற கவலை மற்றும் நிச்சயமற்ற நிலையில்கூட, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, எதிர்காலத்துக்கான நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை, வீடுகளை, சமூகங்களை ஒளிரச்செய்யுங்கள்.

பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள், மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்துள்ளது. பலரும் வேலை இழந்து, விரக்தி உணர்வில் உள்ளனர்.

இந்த சவாலான தருணங்களில் நாம் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும். மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது, சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.