வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது

191 0

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.

வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.

எனவே தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை, நவீன ஆயுத சோதனைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

கடந்த 2 மாதங்களாக இந்த சோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அணுகுண்டை ஏந்தி செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

எதிரிகள் விமானத்தை தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனையும் நடந்தது. கடந்த 28-ந்தேதி அதிக சக்தி வாய்ந்த மற்றொரு ஏவுகணை சோதனையையும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று வடகொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இந்த முறை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கில் அழிக்கும் திறன் கொண்டதாகும்.