’வீதி வேலைகளை விரைவுபடுத்தவும்’ -முன்னாள் தவிசாள் பிறேமகாந்

324 0

முல்லைத்தீவு – திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற வீதி வேலைகளை விரைவுபடுத்துமாறு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான செ.பிறேமகாந் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தபாலக வீதியின் 500 மீற்றர் தவிர்ந்த மிகுதி பகுதியின் அதியுயர் மின்கம்பிகளின் கீழாக செல்வதனால் குறித்த வீதியின் 500 மீற்றர் நீளமே உள்ளடக்கப்பட்டிருந்தது எனவும் எனினும் இவ்வீதியின் மிகுதிப் பகுதிக்குப் பதிலாக நியூட்டன் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனவும் கூறினார்.

இந்நிலையில், குறித்த திட்டங்கள் எவையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாது உள்ளதனை அவதானிக்க முடிகின்றது எனத் தெரிவித்த அவர்,  மழை காலம் ஆரம்பித்துள்ள இந்நிலையில் குறித்த வீதிகளின் நிலை மிக மோசமானதாக காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் கூறினார்.

எனவே, குறித்த திட்டத்தை மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வெகுவிரைவாக ஆரம்பிக்க ஆவன செய்யுமாறு இத்திட்டத்துடன் தொடர்புடைய தரப்பினரை எமது சபையின் சார்பில் கோருவதற்கு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு எனது பிரேரணையினை மக்கள் சார்பில் முன்வைத்துள்ளேன் எனவும், அவர் தெரிவித்தார்.