வீட்டில் தனியாக வசித்து வந்த ஜேர்மனிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

206 0

இரம்புக்கனை ஹிரிவட்டுன்ன பிட்டவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக செல்லப் பிராணிகளுடன் வசித்து வந்த ஜேர்மனிய இனப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று மதியம் மீட்கப்பட்டது என ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

65 வயதான சபீன் மதிய் என்ற ஜேர்மனிய பெண்மனியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த பெண்மணி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் பொலிஸார் வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்த இந்த ஜேர்மனிய பெண், வத்தளை ஹெடேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தவர் என பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண்மணி விவாகரத்தின் பின்னர், 2016 ஆம் ஆண்டு ரம்புக்கனை பிட்டவல பிரதேசத்திற்கு சென்று வசித்து வந்துள்ளார்.

அவர் அங்கு சென்ற நாளில் இருந்து செல்லப் பிராணியாக நாய்களை வளர்த்து வந்துள்ளதுடன் வீட்டில் 12 நாய்கள் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வீதிகளில் இருக்கும் சுகவீனமுற்ற நாய்களை வீட்டுக்கு கொண்டு வந்து, சிகிச்சை அளித்து மீண்டும் கொண்டு சென்று விட்டு வந்துள்ளதாகவும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மேலதிகமாக பிரதேசத்தில் இருக்கும் கட்டாகாலி நாய்களுக்கும் சேர்த்து உணவை சமைத்து கொடுத்து வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.