மண் விவகாரத்தை ஆயுதமாக்குகின்றனர்

140 0

நடைபெற இருக்கின்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு இவர்கள் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக மையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கடைசியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மண் அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார்.

“அது தொடர்பான, எனது விளக்கத்தையும் வழங்க வேண்டிய கடைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.

“சாணக்கியன், உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை உயரிய சபையான பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். என்னுடைய சகேதரர் சதாசிவம் மயூரனின் பெயரிலும் மண் அனுமதிப்பத்திரம் இருப்பதாக பெசில் ராஜபக்ஷவை விழித்து, அவர் கூறியிருக்கின்றார்.

“இதனுடைய நோக்கம் என்ன? உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை பாராளுமன்றத்தில் பெசில் ராஜபக்ஷவை விழித்து கூறியமைக்கான நோக்கம் என்ன  என்று பார்த்தால்,  சண்முகநாதன் மயூரனுக்கும் சதாசிவம் மயூரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பொய்யான தகவலை வழங்கியிருப்பது என்பது இவருடைய எதிர்கால அரசியலுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியும்.

“காரணம் மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள். ஏன் என்றால் உண்மைக்கு புறம்பான செய்திகளைக் கூறியவர்களை கடந்த காலங்களில் மக்கள் நிராகரித்தனர்.

“நான் ஒரு பிழை விட்டால் என்னை திருத்திக்கொள்வேன். பிழைகளை நியாயப்படுத்த நான் விரும்பமாட்டேன். எனது தம்பியின் பெயரில் மண் அனுமதிப்பத்திரம் இருந்தால், அதனை நான் கண்டிப்பேன்.

“என்னுடைய வீட்டில் வுறோணி எனும் நாய்க்குட்டி இருக்கின்றது. அதனுடைய பெயரிலும் கூட மண் பேமிற் இல்லை. ஆனால், சில வேளை அதுவும் பாராளுமன்றத்துக்கு வருமோ தெரியா?

“அதற்கும் ஒரு அப்பாவின் பெயரை வைத்து பேமிற் இருப்பதாக கூறுனாலும் கூறுவார்கள். ஏனென்றால், அரசியலுக்காக ஆதாரமில்லாத கருத்தையே இவர்கள் கூறுவார்கள்.

“இவர்களது பொய்யான கருத்துகளை நாங்கள் மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும். வர இருக்கின்ற பாராளுமன்ற அமர்வில் நான் அது தொடர்பான விளக்கத்தையளித்து, அந்த விடையத்தை ஹன்சாட்டிலே இருந்து நீக்குமாறு சபாநாயகரை கோர இருக்கின்றேன்” என்றார்.