தன்னை விமர்சிப்போர் தீர்வுகளுக்கான மாற்றுவழியை முன்வைத்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கத் தயார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற அவர் அளித்த ஆதரவு குறித்து தற்போது சிலர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்துடன் உறவு வைத்துள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், பல்வேறு விமர்சனப் பார்வைகளும், அபிப்பிராயங்களும் முன்வைக்கப்படுகின்றன.
“குறிப்பாக, இன்று நான் பின்பற்றும் அரசியல் வழிமுறை பிழையானதெனவும், அரசாங்கத்துடன் உறவு முறையை முறிக்க வேண்டுமெனவும் இவர்கள் கூறுகின்றனர்.
“முஸ்லிம் சமூகத்தின் நலனையே நோக்காகக் கொண்டு நான் பின்பற்றும் அரசியல் வழிமுறைகள், அரசுடனான நல்லுறவு குறித்து விமர்சனங்களை முன்வைப்போர் ஏதுவான மாற்றுவழியை முன்வைக்க வேண்டும்.
“இதன் மூலம், முஸ்லிம் தேசிய பிரச்சினைகளுக்கும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தர முயர்த்தல் தொடர்பில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும்.
“மாற்றுவழியை முன்வைக்க விரும்பினால், இதற்கான ஒரு தீர்வுத்திட்டத்தை மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கொண்டதொரு குழு முன்னிலையில் அதனை முன்வைப்பதுடன், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
“அதனை இக்குழு சரியென ஏற்றுக் கொண்டால், அரசுடனான எனது உறவை விலக்கிக் கொள்வது மட்டுமன்றி, எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்யவும் தயாராயுள்ளேன்” என்றார்.

