விவசாயிகள் தற்கொலை.. இதயத்தில் ஈரமில்லாமல் பேசும் அமைச்சர்கள்

255 0

stalin-1தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அமைச்சர்கள் இழிவுப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஈரமின்றி பேசும் அமைச்சர்களை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து தங்களின் உயிரை மாய்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பர் விவசாயிகள், நோய் மற்றும் முதுமை காரணமாக இயற்கை மரணமடைவதாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அமைச்சர் தங்கமணி, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களின் மரணம் அரசியலாக்கப்படுகிறது என்றார். விவசாயிகளின் தற்கொலை குறித்த அமைச்சர்களின் இந்த கருத்து தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இநநிலையில் அமைச்சர்களின் இந்த கருத்துக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கையை தவிடுபொடியாக்கிய அமைச்சர்கள்
தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு வறட்சியின் கொடுமையால் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக ஏறத்தாழ 125 விவசாயிகள் தற்கொலையாலும் அதிர்ச்சியாலும் உயிர்ப்பலியாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதுவரை தூங்கி வழிந்த அதிமுக அரசு அதன்பிறகே ஆய்வுக்குழுவை அறிவித்தது. அதன் மூலமாக விவசாயிகளின் உயிர்ப்பலிகள் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கியுள்ளனர் தமிழக அமைச்சர்கள்.

அமைச்சர்களின் கருத்துக்கு கண்டனம்
ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள் என விவசாயிகள் குமுறுகிறார்கள். அவர்களின் வேதனையைத் துடைக்க வேண்டிய அமைச்சர்களோ, வேளாண்குடிகளையே ஒட்டுமொத்தமாக இழிவு செய்யும் வகையில் பேசியுள்ளனர். அமைச்சர் ஒருவர் “தமிழகத்தில் விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிர் இழக்கவில்லை. வயது முதிர்வாலும், உடல் உபாதையினாலுமே உயிர் இழந்துள்ளனர். அவர்கள் வறட்சியால் இறந்து போனார்கள் என எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து எங்களின் ஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்” என ஆணவத்துடன் பேசியிருக்கிறார். மற்றொரு அமைச்சரும் இதேபோல கருத்து தெரிவித்துள்ளார்.

அறிக்கை தாக்கல் செய்ய ஆணை
தமிழகத்தில் 100க்கும் அதிகமான விவசாயிகள் இறந்து போன அதிர்ச்சி செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்து, தேசிய மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து (suo moto) ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. விவசாயிகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து 6 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. அதுபோலவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “விவசாயிகளைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த பதில் மனுவை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமைச்சர்கள் கருத்து நீதிமன்ற அவமதிப்பு

உயர்நீதிமன்றமும் தேசிய மனித உரிமை ஆணையமும் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் இதற்குப் புறம்பாகப் பேசி விவசாயிகளின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருப்பது சட்டமீறல் மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்புச் செயலுமாகும். 2011ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, சாகுபடி என்பது சாகும் படியாகி வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 2ஆயிரத்து 500 விவசாயிகள் இந்த பாதிப்பினால் மரணமடைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த உண்மைகளைத் தொடர்ந்து மறைத்து, மழுப்பி வரும் அதிமுக அரசு தான் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது.

இழிவுப்படுத்துவதாக சாடல்
விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் முதுமையினால் ஏற்பட்ட மரணங்கள் என்றும், சொந்தப் பிரச்சினையால் ஏற்பட்டவை என்றும், கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை என்றும் இழிவுபடுத்தும் போக்கை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர்த் தேவை குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய அரசின் குழுவிடம் மாநில அரசு சார்பில் சமர்ப்பித்த அறிக்கையில்கூட, விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் மறைத்து, அவர்களின் குடும்பத்திற்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடுகளுக்கு வாய்ப்பின்றிச் செய்து வசவுகளுக்கு ஆளாயினர்.

அமைச்சர்களுக்கு கேள்வி
கடந்த ஒரு மாதத்தில் மரணமடைந்தவர்களில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடம்பன்குடியைச் சேர்ந்த விவசாயி வீரமணி என்பவருக்கு வயது 30. கடந்த 30-12-2016ல் தற்கொலை செய்து கொண்ட இவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதுபோலவே செம்பனார்கோவில் சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 34வயது விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி மரணமடைந்திருக்கிறார். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி கீர்த்திகா 22-12-2016 அன்று அதிர்ச்சி மரணமடைந்தார். இவருக்கு வயது 36. இவையெல்லாம் வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட மரணங்களா? இவர்களைப் போல பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்
மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்கள் என 400க்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிட்டுள்ளார்களே, அவர்களில் வயது முதிர்ச்சியானவர்களே கிடையாதா? அவர்களுக்கு உடல் உபாதைகளே ஏற்படவில்லையா? மரணமடைந்தவர்களையெல்லாம் மொத்தமாக அம்மையார் ஜெயலலிதாவுக்காக இறந்தவர்கள் எனப் பட்டியலிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அறிவித்துள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் கொச்சைப்படுத்துவது, தமிழக விவசாயப் பெருமக்களையே மொத்தமாக வஞ்சிக்கும் செயலாகும்.

அமைச்சரவையில் ஒற்றுமை குலைந்துள்ளது
இதயத்தில் ஈரம் சிறிதுமின்றி அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் உதிர்க்கும் சருகு போலக் காய்ந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இருக்கிறது. எனினும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு என்பதும் அமைச்சரவை ஒற்றுமை என்பதும் குறைந்து குலைந்து போயிருக்கும் நிலையில்,அவர் தான் என்ன செய்வார், பாவம்! தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வரும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்த உண்மை விவரத்தை முழுமையாக வெளியிடுவதுடன், இனியும் மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், நிவாரண ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் முதல்வர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.