தடுப்பூசி போடுங்க… பரிசை வெல்லுங்க… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்

160 0

25-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்

கரூர் மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதி நடத்தப்பட உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டது. வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5-ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 22 ஆயிரத்து 735 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 1 லட்சத்து 68 ஆயிரத்து 650 பேரும் செலுத்தி உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

இதற்காக வாக்குச்சாவடி அளவிலான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். ஒரு நபருக்கு 50 முதல் 60 வீடுகள் இலக்கீடாக வழங்கப்படலாம். இந்த கணக்கெடுப்புக்கென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வாக்குச்சாவடி அளவில் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த குழுக்களை ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளின் தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும். கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ? அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும், அன்றைய முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக கிரைண்டர், 3-ம் பரிசாக மிக்சி, 4-ம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 நபர்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்பட உள்ளது.

25-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும். முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் நபர்களின் தகவல்களும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறித்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.

5-ம் கட்ட முகாமின் மூலம் 100 சதவீத இலக்கை நமது மாவட்டம் எய்திட அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.