பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு

295 0

201701062204337195_33-inmates-die-in-brazil-prison_secvpfபிரேசில் நாட்டில் மேலும் ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.

பிரேசில் நாட்டில் போதைப்பொருள் விற்கும் கும்பலை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துவருகிறது. கடந்த திங்கட்கிழமை அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

கைதிகள் இரு பிரிவாக கடுமையாக மோதிக்கொண்டனர். பாதுகாப்பு படையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதில், 60 கைதிகள் உயிரிழந்தனர். ஏராளமானோர் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று இரவு அண்டை மாநிலமான ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில், 33 கைதிகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலவரம் நடந்த மான்டி கிறிஸ்டோ சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும், கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதமும் இதே சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.