தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : சசிகலா கோரிக்கை

270 0

sasikala_new_2a_14142இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுக்கோட்டை மீனவர்கள் நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளையும் 10 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 584 படகுகளில் கச்சத்தீவை ஒட்டியுள்ள இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். அவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர்.

இந்திய மீனவர்கள், அதாவது தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 51 பேர் இலங்கை சிறைகளில் இன்னமும் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள ஏராளமான படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் விரைவில் வர உள்ளது. இந்த வேளையில், மீனவர் குடும்பங்களில் தலைவனும், பிள்ளைகளும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அல்லல்படும் சோகம் சூழ்ந்திருக்க வேண்டுமா?

எனவே, மீனவர் குடும்ப பெண்களின், குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் இலங்கை அரசு உடனடியாக இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்