1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

160 0

கற்பிட்டி ஏத்தாளைப் பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சுற்றிவளைப்பின் போது நான்கு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பிரதேசத்தில் இன்று (05) மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளை பரிசோதனை செய்தனர். இதன்போது, குறித்த இரண்டு படகுகளிலும் மிகவும் சூட்சகமான முறையில் 31 உரமூடைகளில் பொதி செய்யப்பட்ட 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கொண்டுவரப்பட்டதாக கடற்படையினர் கூறினர்.

இதன்போது குறித்த இரு படகுகளில் இருந்தும் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுன், அவர்கள் பயணித்த இரண்டு டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அசந்தேக நபர்கள் 29 இற்கம் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் இந்த உலர்ந்த மஞ்சள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு ஏத்தாளை பகுதியிலிருந்து மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுகள் என்பனவும் மேலதிக விசாரணைகளுக்காக சின்னப்பாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த ஐந்து நட்களில் மட்டும் 3004 கிலா கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், எட்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ம் திகதி கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19ம் திகதி இப்பந்தீவு பகுதியில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 22ஆம் திகதி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும், 27 ஆம் திகதி அதே பகுதியில் 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இன்று (05) ஏத்தாளை பகுதியில் 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.