உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு -தம்பிராசா செல்வராணி

256 0

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒரு துளியேனும் நம்பிக்கை இல்லை எமது பிரச்சினை தீரும் வரை எமது போராட்டம் தொடரும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையிட்டு இன்று திங்கட்கிழமை (30) தம்பிலுவில் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்..காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய எமது போராட்டம் கொரோனா காரணமாக வீதியில் நின்று கேட்க முடியாத நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளோம். அதேவேளை 12 வருடமாகியும் சுற்றிவளைப்பின் போதும் , வீடு வீடாக பிடித்து செல்லப்பட்ட , யுத்தத்தின் போது ஒப்படைக்கப்பட்ட எத்தனையோ உறவுகளை இன்று இழந்து நிற்கின்றோம்.

உலக வரலாற்றில் தமிழர்களாகிய நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். உறவுகளை இழந்து தாங்கமுடியாத உயிர் வலியில் உள்ளோம். உறவுகளை தேடிய போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோரை இழந்துள்ளோம் இந்த நிலை இனியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்ட உறவுகளுக்கு ஏற்படக்கூடாது.

ஒன்றுமில்லாத ஓ எம் பி காரியாலயத்தை இரவோடு இரவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ளனர் 48 வது ஐ.நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை காப்பாற்றவே கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த காரியாலயத்தை அமைத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் புலனாய்வு பிரிவினரால் பல கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளோம். அதேவேளை உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை . சர்வதேத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையுமே நம்புகின்றோம். என அவர் தெரிவித்தார்;.