நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை(காணொளி)

260 0

delf-03-01-2017-1யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள ஆயிரத்து 390 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 559 பேர் வரையில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இதனைவிட பல்வேறு தொழில்களின் நிமிர்த்தம் தங்கியிருப்போர் சுற்றுலாப்பயணிகளாக வருவோர் என சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளடங்கிய வகையில் மருத்துவ தேவையை நிறைவு செய்யவேண்டிய ஒரே ஒரு வைத்தியசாலையாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலை ஆரம்பத்தில் மாவட்ட வைத்தியசாலையாக இருந்;த நிலையில் தற்போது தரம் குறைக்கப்பட்டு சீ தர வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

இருந்தபோதும் சீ’தரவைத்தியசாலையின் வசதிகளைவிட நெடுந்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ள கடல் மார்க்கப் போக்கு வரத்துக்களைக் கொண்ட தனித்தீவாகவுள்ளதால், இதற்கு விசேட தேவைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், மகப்பேற்று விடுதி அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட வசதியின்மை, உபகரணத்தொகுதிகளுக்கான வசதியின்மை,  குருதிப்பரிசோதனை செய்வதற்கான வசதியின்மை, விசர்நாய்கடி தடுப்பூசிக்கான மருந்து வசதியின்மை தொற்றுநோய்களுக்கான மருந்து வசதிகள் இன்மை என பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றிக் காணப்படுகின்றன.

இதனைவிட கடந்த எழுபது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மகப்பேற்று விடுதி, ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி உள்ளிட்ட கட்டடங்கள் மிக மோசமாக சேதமடைந்து நோயாளிகளை வைத்து பராமரிக்கக்கூடிய வசதிகள் இன்றியும் நோயாளிகள் தாதிய உத்தியோகத்தர்கள் வைத்தியர்களுக்கான மலசலகூட வசதிகள் அறைகள் உள்ளிட்ட எந்த விதஅடிப்படை வசதிகள் இன்றியும் காணப்படுகின்றன.

இதேவேளை இரண்டு வைத்தியர்கள் சேவையை வழங்க வேண்டிய நிலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே தற்போது உள்ளதாகவும், இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் மாத்திரம் ஒரு தாதிய உத்தியோகத்தர் மட்டும் சேவையில் இருப்பதாகவும் ஏனைய ஆளணிபற்றாக்குறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளி குறித்த வைத்தியசாலையில் குருதிப்பரிசோதனை செய்தல், விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசியின்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்மையால் இங்கு சிகிச்சை பெறச்செல்லும் நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலைக்கே செல்லவேண்டியுள்ளது.

குறித்த நோயாளிகளை நோயாளர் காவுவண்டி மூலம் கொண்டு செல்வதற்கு சுமார்  நாற்பது லீற்றர் வரையான டிசல் தேவையுள்ளதுடன் படகுச்சேவையுட்பட்ட மூன்று நோயாளர்; காவு வண்டிகளில் மாற்றிச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் குறித்த வைத்தியசாலை காணப்படுகின்றது என்றும், இதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.