வவுனியாவில் மரணச்சடங்கில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா!

206 0

வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இம்மாதம் 24 ஆம் திகதி வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டியன் பரிசோதனை மேற்கொண்ட போது இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரணசடங்கில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு இன்றையதினம் (30) அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதோடு சுகாதார பிரிவினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

தற்போது நாட்டில் கொரோனா தாண்டவமாடி வரும் நிலையில் இவ்வாறான சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோ தேவையற்ற விதத்தில் வெளியே செல்வதனை தவிர்க்குமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுகொண்டுள்ளனர்.