சுகாதார பணியாளர்களை மன உளைச்சலிற்கு உள்ளாக்கவேண்டாம் – சிறிதரன்

192 0

கொரோனா காலத்தில் தம்மை அர்ப்பணித்து செயற்படும் சுகாதார பணியாளர்களை மன உளைச்சலிற்கு ஆளாக்க வேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சுகாதார பணியாளர்கள் நிலமை தொடர்பாக
ஆராய்வதற்குநேற்று (24) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போத இவ்வாறு குறிப்பிட்டார் அவர் மேலும் குறிப்பிடுகையில். உலகை கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக ஆட்டிப் படைத்து வருகின்ற கொவிட்19 தொற்று காரணமாக பல இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரை குணப்படுத்துவதிலும் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பலர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறே கிளிநொச்சி வைத்தியர்கள் மருத்துவ தாதிகள் உள்ளிட்ட சுகாதார சேவை பணியாளர்கள் பலர் பொது மக்களுக்காக தங்கள் மீதான கொரோனா தொற்று அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக அர்ப்பணிப்பான சேவை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தம் உயிரை பொறுப்படுத்தாமல் இவ்வாறு கிளிநொச்சி மக்களுக்காக சேவையாற்றி வரும் வைத்தியர்கள் சுகாதார பணியாளர்களின் சேவைகளினை பாராட்டுவதை விடுத்து சமூக ஊடகங்களின் மூலம் அவதூறுகளை பரப்பும் நோக்குடனும் அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் பதிவுகளை இடுவது மன வருத்தத்தை அளிக்கிறது

இவ்வாறு தம் உயிரை அர்ப்பணித்து எமக்காக பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் முகமாக ஊடகங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுங்கள் அப்பொழுது அவர்கள் மன நிறைவுடன் தமது பணிகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்தார்.