புளியங்குளம் கல்மடு கிராமத்தில் 13 பேருக்கு கொரோனாவால் கிராமம் முடக்கம்!

167 0

வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த கிராமம் காவல்துறையினரால்  தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. கல்மடு கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக வவுனியா வடக்கு சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று எழுமாறாக அன்டியன் பரிசோதனை  முன்னெடுக்கப்பட்டது. அதிலே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில்  புளியங்குளம் கல்மடு கிராமத்தில் 35 குடும்பங்கள் உள்ளனர். அதில்19 குடும்பங்களில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 13 பேருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 10 நாட்களின் பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே குறித்த கிராமம் முடக்க நிலையில் இருந்து விடுபடும் என சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.