கல்முனையில் இருந்து மட்டக்களப்பு கல்குடாவிற்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற பிரதான போதை மாத்திரை வியாபாரியான மட்டு போதனா வைத்தியசாலையில் ஊழியராக கடமையாற்றிவரும் ஒருவரை கல்முனை பகுதியில் இன்று புதன்கிழமை (18) பகல் 12.30 மணிக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கைது செய்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் சம்பவதினமான இன்று பகல் 12.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது மட்டு கல்குடாவில் இருந்து கல்முனைக்கு டியோ ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் போதை மாத்திரைகளை பொதி செய்து சூட்சுமமாக மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழ் மறைத்து எடுத்துவந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் கல்முனை பகுதியில் வைத்து நிறுத்தி சோதனையிட்டனர் இதன் போது 3000 போதை மாத்திரைகளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும் 32 வயதுடையவர் எனவும் இவர் கொழும்பிலுள்ள முகவரோடு நேரடியாக போதை மாத்திரைகளை இறக்குமதி செய்து மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டடங்களில் போதை மாத்திரை ஏகவிநியோகத்தராக கடந்த 6 வருடங்களாக செயற்பட்டு வருவதாக அதிரடிப்படையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இனையடுத்து கைது செய்யப்பட்டவர் மற்றும் மீட்கப்பட்ட போதை மாத்திரை மோட்டார்சைக்கிள் என்பவற்றை காவல்துறையினரிடம் விசேட அதிரடிப்படையின் ஓப்படைத்ததையடுத்து இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.