பிரியா – நடேஸ் குடும்பத்தின் வழக்கு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

262 0

அவுஸ்திரேலியா புகலிடக்கோரிக்கைக்காக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பமான நடேஸ்- பிரியா தம்பதிகளின் நான்கு வயது சிறுமி சார்பாக மேல்முறையீடு செய்ய அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பமான நடேசன்- பிரியா தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீட்டை விசாரிப்பதற்கே இவ்வாறு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடேஸ்- பிரியா தம்பதிகளின் நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதி தஞ்ச விண்ணப்பத்தில் நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.அத்துடன் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இது பிரியா குடும்பத்திற்கு சாதகமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டதுடன், தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்தது.

அதேவேளை மறுபுறத்தில் பிரியாவும் நடேசும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் பிறந்த தருணிகாவும் சட்டவிரோத குடியேறியாகவே பார்க்கப்படுவதாகவும், அவர் சார்பில் 2019ம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்ட பாதுகாப்பு விண்ணப்பம் செல்லுபடியற்றது (குடிவரவு அமைச்சர் விதிவிலக்கு அளிக்காதபட்சத்தில்) எனவும் பெடரல் நீதிமன்றம் மற்றுமொரு தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து குறித்த தீர்ப்பிற்கெதிராக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்த நிலையில், தருணிகாவின் சட்டத்தரணி இதற்கான அனுமதியைக் கோரியிருந்த நிலையில் அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.