ஆப்கானிஸ்தானில் ஐ.நா அலுவலகம் மீது தாக்குதல்

154 0

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க அரசு படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து செயல்பட்டு வரும் நிலையில், அங்கு தலிபான்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது. எனினும், திட்டமிட்டபடி கடந்த 1-ம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளிப்போனது.  இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கியதால் ஆப்கானிஸ்தான் போலீஸ் காவலர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்ற அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அலுவலகத்தில்  பாதுகாப்பு குவிக்கப்பட்டு உள்ளது.