சர்வதேச அழுத்தங்கள் மூலமாக ஆட்சியை மாற்ற எதிரணி முயற்சி என கப்ரால் குற்றச்சாட்டு!

150 0

“மனித உரிமைகள் குறித்தும், போர்க்குற்றங்கள் என்ற குற்றச்சாட்டிலும் சர்வதேசம் இலங்கையை நெருக்கிக் கொண்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியாகவும், சர்வதேசத்தை எமக்கு எதிராகத் திருப்பி, சர்வதேச முதலீடுகளைத் தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இப்போதுள்ள நிலையில் சர்வதேச கடன்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுவது தவறானது. சர்வதேச கடன்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. சீனா, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் இது குறித்து கலந்துரையாடியுள்ளோம். அந்த நாடுகள் கடனை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

அதேபோல், மாணிக்கக்கல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துகின்றோம். அண்மையில் மிகப்பெரிய மாணிக்கக்கல் எமக்குக் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாது எமது மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் வியாபாரத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதேபோல் ஏற்றுமதி குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.

அடுத்த மூன்று மாதங்களில் 2650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறான வேலைத்திட்டங்களின் மூலமாக எமக்குக் கிடைக்கும். எனவே, இனியும் கடன்களை எதிர்பார்த்துச் செல்லாது இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

தேசிய வியாபாரிகளைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.அவ்வாறான தீர்வுக்குச் செல்வது இலகுவான காரியம் அல்ல. கடினமான இலக்கொன்றை நோக்கி நாம் பயணிக்கின்றோம்” – என்றார்.