ஆப்கன் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: தலிபான்கள்

183 0

ஆப்கன் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தீவிரப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை தலிபான்கள் புதன்கிழமை சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆப்கன் நிலத்தை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த விடமாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்ததாகவும், ஆப்கன் விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த சீனா உதவும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதியளித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

பின்னணி:

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.