உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடம் பிற்போட வாய்ப்பு!

183 0

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருட காலத்துக்கு ஒத்திவைக்க விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி தேர்தலை நடத்தாமல், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிவரை அதனைப் பிற்போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

கடைசியாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்பு நடத்தப்பட வேண்டும்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் விதிகளின்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதியிலிருந்து சுமார் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி, குறித்த திகதியிலிருந்து தேவைப்பட்டால் மேலும் 16 நாட்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது எனத் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வருடத்துக்கும் மேலாக மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.