கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

189 0

வவுனியா – தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, வவுனியா நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தாண்டிக்குளம் பகுதியில், கடந்த வாரம், கண்டி வீதி –ரயில் வீதிக் கரையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள், வவுனியா பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் அப்பகுதியில் தாண்டிக்குளம் கிராம அலுவலகரும் தனது கடமைகளை பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த சட்டவிரோதமாக விற்பனை நிலையம் அமைத்த நபர் ஒருவர், குறித்த கிராம அலுவலகரை மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து வழிமறித்து, அவருடன் முரண்பட்டு. தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்த, சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில், கொக்குவெளியில் உள்ள பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி, விற்பனை செய்து வந்துள்ளதுடன், பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டதால், பல தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு தண்டனைகள் அனுபவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.