பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் – சட்டத்தரணி சுகாஸ்

212 0

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு, குரல் கொடுப்பது மட்டுமின்றி சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது இலங்கை அரசினுடைய அல்லது இலங்கை அரசை பல்வேறுபட்ட அரசாங்கங்களினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக செயல்படுகின்றவர்களை அல்லது அரசாங்கங்களினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத் தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்க முடியும்.

ஏனென்றால், இலங்கையிலே நடைபெற்றது ஒரு பயங்கரவாதம் கிடையாது. அது ஒரு இனம், தன்னுடைய விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைக்காக செயல்படுவது பயங்கரவாதம் ஆகாது. அந்தவகையில் இலங்கையிலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதாவது இன்று சிறைகளிலே நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படாது அல்லது ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவடையாது எப்பொழுது தங்களுடைய வழக்குகள் முடிவடையும் என்பது கூடத் தெரியாது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2009ஆம் ஆண்டுக்குப் பின் பயங்கரவாதம் இல்லை. அல்லது பயங்கர வாதத்தை நாங்கள் முறியடித்து விட்டோம் என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தது உண்மை. ஆனால் 2009இற்குப் பின்னர் நான் மேலே குறிப்பிட்ட வாறு, தங்களுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறாக செயல் படுகின்றவர்களை அடக்குவதற்கு தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் விரும்பியோ, விரும்பாமலோ கொண்டு வருவதற்கான ஒரு உத்தியாக, ஒரு சாதனமாக இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பது தான் உண்மை.

இன்று தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமின்றி, ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் தலைவர்களும் சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இது இலங்கை அரசும், அரசை ஆளுகின்ற அரசாங்கமும் தங்களினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவர்களை அல்லது ஏற்காதவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என்பதற்கு மிகச்சிறந்த ஆதாரம் இது.

ஆகவே, இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு, நீக்குவதற்கு, ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது மட்டும் தீர்வைத் தராது. அதையும் தாண்டி சர்வ தேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது.” என்றார்