முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் விடுவிப்பு

348 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரடங்கிய குழுவினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு. பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கொரோனா சுகாதார வழிகாட்டல்களை காரணம் காட்டி தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரை தனிமைப்படுத்தினர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், 8 நாட்களின் பின்னர், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல்லேகலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் கடந்த 7 ஆம் திகதி பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று (16) அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.