ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தயார்

160 0

ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகிய இருவரும் இதுவரை காலம் நித்திரையிலிருந்து தற்போது தான் விழித்து ஆசிரியர் சங்கத்துடன் கலந்துரையாடலுக்கு நேற்றைய தினம் ஒத்துக் கொண்டுள்ளனர் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இணைய கற்பித்தலிலிருந்து விலகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

முதலாவது நிபந்தனையின் கீழ் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது நிபந்தனைப் படி தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்படத் தொழிற்சங்கத் தலைவர்களையும், சிவில் அமைப்பினரையும் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர்களை விடுதலை செய்வதற்குச் சாதகமான நிலை காணப்படுகின்றது. தற்போது அவர்கள் மீது மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை யில் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களை விடுதலை செய்ய முடியும்.

பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களை 10 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதோர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து விடுக்கப்படுவார்கள்.
குறித்த சம்பவத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை விடுவிக்காமல் இருப்பது பழிவாங்கும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடாமல் தான் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளோம்.

இந்நிலையில் கலந்துரையாடல் சாதகமாக அமைந்தால் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு வழமை போல் செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.