மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது.
இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மன்னார் வயல் வீதி பகுதியில் உள்ள இரு சிற்றாலயங்கள் மீதும், மன்னார் – பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள சிற்றாலயம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேநேரம் கடந்த இரண்டு நாட்களிலும் மூன்று சிற்றாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன்படி, மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

