மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலாரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் ஆகிய எனது மகனின் படு கொலைக்கு நீதிவேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.
கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது இதன்போது குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது குறித்த சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு ஆஜரான உயிரிழந்தவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து எனது மகனுக்கு என்ன நடந்தது எதனால் பிரச்சனை வந்தது என்றதுடன் எனது பிள்ளைக்கு நீதிகிடைக்கவேண்டும் அதுமட்டும்தான் தேவை என்றார்.

