தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

272 0

புத்தளம் மதுரங்குளி விருதோடை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (03) காலை 10.30 மணியளவில் தீ ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது பொதுமக்களின் உதவியுடன் முப்படையினர், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய நகர சபைகளின் தீயணைக்கும் பிரிவினர், கடற்படையின் தீணைக்கும் பிரிவினர் கூட்டாக பல மணி நேரப் போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலையில் உள்ள பல இயந்திரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க தும்பும் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தும்பு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் இவ்வாறு திடீரென தீப்பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான மேலதிக விசாரனைகளை புத்தளம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தீயினால் எரிந்த தும்பு தொழிற்சாலையை புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.