யாழில் வாள் வெட்டில் துண்டிக்கப்பட்டவரின் கை சத்திரசிகிச்சை நிபுணரால் மீளப்பொருத்தப்பட்டது

198 0

யாழ் கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழுவினரால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதிக்கு நேற்றிரவு புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இடதுகை மணிக்கட்டுடன் துண்டாடப்பட்டது.

இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழு மேற்கொண்ட தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து அவரது கை மீளப் பொருத்தப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்பட்டு கொழும்பில் பணியாற்றி வந்த வைத்தியர் இளஞசெழிய பல்லவன், கடந்த சில தினங்களின் முன்னரே யாழ் போதனா வைத்தியசாலைக்கு மீள இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் ஏற்கனவே, விசுவமடு பகுதியில் வாள் வெட்டுக் கும்பலின் தாக்குதலில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட ஒருவரின் கைகளையும் இளஞ்செழிய பல்லவன் பொருத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.