மத்திய-மாநில அரசுகளின் அனுமதி கிடைக்காவிட்டாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் தடைபட்ட ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த வலியுறுத்தி அங்குள்ள வாடிவாசல் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.ஜல்லிக்கட்டு பேரவை நிறுவனர் ஜெய கார்த்திக் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரஞ்சித், மாவட்ட தலைவர் நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு விழா நடத்துவது தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டாகும். பீட்டா என்ற ஒரு தனி அமைப்பு தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் அழிக்க நினைக்கிறது.
கேரளாவில் யானை பந்தயமும், ராஜஸ்தானில் ஒட்டக ஓட்டமும் இன்று வரை தடை செய்யாமல் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் விலங்குகள் நலவாரியத்திற்கு தெரியாதா? தமிழகத்தில் 33-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது.அது நீதிமன்ற உத்தரவுபடி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களில் நடந்து வந்தது. அதுவும் தற்போது நடைபெறவில்லை.
இவ்வாறாக தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்படுத்தப்பட்டு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் தைப்பொங்கல் உள்ளிட்ட பாரம்பரிய திருவிழாக்களை கூட கொண்டாட முடியாத அவல நிலை ஏற்படும்.
எனவே இனிமேலும் நீதிமன்றத்தையும், மத்திய, மாநில அரசுகளையும் எதிர் பார்த்து காத்திருக்காமல் ஜல்லிக்கட்டு விழாக்களை நடத்த வேண்டிய நேரத்தில் நடத்த வேண்டிய இடத்தில் தடையை மீறி நடத்துவோம். இதற்காக காவல்துறையும், அரசு நிர்வாகமும் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

