கொரோனா தொற்றிலிருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆலய நிர்வாகத்தின ருக்கு இருக்க வேண்டும் என இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய மகோற்சவம், திருவிழாக்கள் தொடர்பாக பலர் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸ்வரன் உகந்தை முருகன் ஆலய உற்சவத்துக்கு 30க்கும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளார். மேலும், பாத யாத்திரை, ஒன்றுகூடல், வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவதற்கான அனுமதி போன்றனவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆலய மகோற்சவங்கள் இடம்பெறும் இடங்களில் மாவட்ட செயலாளர், மாவட்ட சுகாதார அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அனுமதியுடனேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அத்தோடு, சுகாதார அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆலய நிர்வாகத்தினருக்கு உண்டு.

