அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின்

492 0

201612270818426861_ma-subramanian-says-mk-stalin-example-political-civilization_secvpfஅரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின் என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து உள்ளார்.

அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின் என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பதில் அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சசிகலாவை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நேரில் சந்தித்து அ.தி.மு.க.விற்கு தலைமையேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததை கண்டித்து, சட்டசபை எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான ஸ்டாலின் கவர்னருக்கு புகார் அளித்தார். அந்த புகாரில் உயர்கல்வியின் ஒளிவிளக்காக இருக்க வேண்டியவர்கள், இப்படி அரசியல்ரீதியாக செயல்பட்டது தவறு என்றும், அதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை முழுமையாக படிக்காமல், அ.தி.மு.க. வின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியம் அரைவேக்காட்டுத்தனமாக விடுத்திருக்கும் அறிக்கையில், என்ன சொல்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு உளறிக் கொட்டியிருக்கிறார்.

மறைந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரிடமெல்லாம் அரசியல் செய்து, மறைந்த மூப்பனார் அவர்களின் உதவியில் வளர்ந்து, பிறகு அவரது பிள்ளையை நட்டாற்றில் விட்டு விட்டு, தேர்தல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும், தனக்கு அங்கீகாரம் அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, மறைந்த ஜெயலலிதாவிடம் காட்டிக்கொடுத்தவர் அவர்.

அதனால் தான் நாகரிகமாக அரசியல் செய்து வரும் ஸ்டாலினை பார்த்தால், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.இன்று சசிகலாவிற்கு விசுவாசமாக அவர் இருப்பது என்பது அவரது சொந்தப் பிரச்சினை. அதற்காக ஸ்டாலினை வம்புக்கு இழுக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். அ.தி.மு.க.வின் உட்கட்சி விஷயங்களில் தி.மு.க. தலையிடுகிறது என்று சொல்லும் அவரிடம் நான் கேட்க விரும்புவது, அ.தி.மு.க.விற்குள் அரசியல் செய்து கொண்டிருப்பது அந்த கட்சியின் அமைச்சர்களா அல்லது தி.மு.க.வா? சசிகலாவிற்காக ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்று சொன்னது யார்? அ.தி.மு.க. அமைச்சர்கள் தானே?

சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர், 20 நாட்கள் பதவியில் இருப்பதற்குள், அவரை பதவி விலக வலியுறுத்தி, மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதியில் நின்று தீர்மானம் நிறைவேற்றி, சசிகலாவிடம் கொடுத்து, அநாகரீகமான அரசியல் செய்தது அ.தி.மு.க. அமைச்சர்கள் தானே?

தலைமைச்செயலகத்திலேயே வருமானவரி சோதனை நடந்தும், அதுபற்றி இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பது யார்? அ.தி.மு.க.வில் பதவி சுகத்தை மட்டுமே அனுபவிக்க உட்கட்சியிலேயே அரசியல் செய்யும் அமைச்சர்கள் தானே ?

எங்கள் ஸ்டாலின், அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர். மறைந்த அம்மையார் ஜெயலலிதாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அஞ்சலி செலுத்தியவர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் கொடுக்கும் நெருக்கடி பற்றி இன்றைய பேட்டியில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொங்கியிருக்கிறார் என்றுதான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் அறிக்கையை படித்ததும் நினைக்கத் தோன்றுகிறது. அ.தி.மு.க.விற்குள் உள்ளபடியே அரசியல் செய்யும் சக்திகளை தட்டிக்கேட்க திராணியில்லாத எஸ்.ஆர்.பி., தளபதி மீது பாய்வது, அவரது வயதிற்கும், அரசியல் அனுபவத்திற்கும் ஏற்றதல்ல.

இன்றைக்கு 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. விற்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்திலும், நிதானம் காக்கிறார். அவரை வீணாக சீண்ட வேண்டாம் என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை கேட்டுக்கொள்கிறேன். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு, இப்படி கண்மூடித்தனமாக கல்லெறிவது, அ.தி.மு.க.விற்கு எந்தவகையிலும் உதவாது என்று சுட்டிக்காட்டும் அதேவேளையில், சொந்த வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு, அடுத்த வீட்டுக்காரரிடம் அசிங்கமான அரசியல் நடத்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் துணை போகவேண்டாம். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.