தமிழகத்தில் ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதாவால் மட்டுமே நிரப்ப முடியும் என்று கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊழல் புரையோடி போய் உள்ளது. அதனால் தான் தமிழகத் தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகளவில் சோதனை நடத்துகிறார்கள். தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த விசாரணை சரியான பாதையில் செல்கிறது.
பணம் எடுப்பதற்காக மக்கள் , வங்கிகளில் வரிசையாக நிற்பதற்கு காரணம் பிரதமர் மோடி அல்ல. பதுக்கல்காரர்கள் தான் காரணம். வருமான வரித்துறையின் சோதனை சுயலாபத்துக்காக என திருநாவுக்கரசர் கூறுவது ஊழலுக்கு துணை போவது போல் உள்ளது.தமிழகம் அனைத்து துறைகளிலும் தங்களது செயல்பாட்டை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மறைந்த ஜெயலலிதா அளவுக்கு இணையான தலைவர்கள் அ.தி.மு.க.விலும், தமிழகத்திலும் இல்லை. ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதாவால் மட்டுமே நிரப்ப முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்த டாக்டர் சரவணன் டெல்லியில் மர்மமான முறையில் இறந்தார்.இந்த நிலையில் திருப்பூரில் உள்ள டாக்டர் சரவணனின் பெற்றோரை தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-டாக்டர் சரவணன் சாவுக்கு உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும். அவரது சாவு தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அப்படியானால் யார் காரணம்? எதற்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் இந்த விஷயத்தில் தற்போது வரை முழுமையான விசாரணை நடக்கவில்லை.எனவே பா.ஜனதா சார்பில் உரிய நியாயம் கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் . தேவைபட்டால் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

