கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உளவு இயந்திரங்கள் பறிமுதல்

211 0

கிளிநொச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பழைய ஊரியான் பகுதியில் நேற்று  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கோர கண்கட்டு கிராம விருத்திச் சங்கத் தலைவர் மற்றும் கோரக்கன் கட்டு கமக்காரர் அமைப்பு செயலாளர் ஆகியோரின் உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பழைய ஊரியான் கோர கண்கட்டு போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாகச் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ளடங்குகின்ற கோரக்கன் கட்டு கிராம விருத்திச் சங்கத்தின் தலைவர் மற்றும் கோரக்கன் கட்டு கமக்காரர் அமைப்பின் செயலாளர் ஆகியோரின் உழவு இயந்திரங்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகக் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப்பகுதிகளில் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற சட்டவிரோத மணல் கடத்தல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.