அழுகிப்போன இலங்கைக்கு புனுகுபூசும் ராம்! – புகழேந்தி தங்கராஜ்

317 0

ram‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் சம்மதத்துடனேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை அப்படி ஒரு விசாரணை நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.

சிங்கள ராணுவத்தின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில் சர்வதேச அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே அந்தத் தீர்மானத்தைத் தானும் ஆதரிப்பதாக ஒரு நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியது இலங்கை. இன்றுவரை தீர்மானத்தின் ஒரே ஒரு வார்த்தையைக்கூட அது நிறைவேற்றவில்லை நிறைவேற்றப்போவதுமில்லை.

நடப்பது நாடகமென்று தெரிந்தேயிருந்தும் அதற்காக இலங்கையைப் பாராட்டிய அறிவுக் கொழுந்து நம்மூர் ஹிந்து. அன்று அந்தத் திட்டமிட்ட நயவஞ்சக நாடகத்துக்காக இலங்கையைப் பாராட்டிய அதே ஹிந்து அந்த நாடகத்தின் மூலம் சர்வதேசத்தின் முகத்தில் இலங்கை கரிபூசிய சாமர்த்தியத்தை நினைத்து நினைத்து நெகிழ்ந்துபோகிறது இன்றுவரை! மேகலை கழன்று கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி!

‘போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் விடுக்கும் கோரிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனவா அல்லது மௌனமாக்கப்பட்டுவிட்டனவா?’ என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பெருமிதத்தோடு ஹிந்து கேட்டிருக்கிறது. (As for the International demands – for an Investigation into warcrimes – they have been moderated or have quietened down?)

(சென்றவாரம் ஆங்கில ஹிந்துவில் வெளியான ரணில் பேட்டி கேள்வியையும் தமிழ் ஹிந்துவில் அது தமிழில் வெளியாகியிருப்பதையும் அப்படியே கொடுத்திருக்கிறேன்.)

‘போர்க்குற்றங்கள் மீதான விசாரணையை வலியுறுத்தி சர்வதேசம் கொடுத்த அழுத்தம் குறைந்திருக்கிறதா கைவிடப்பட்டு விட்டதா?’ – சுற்றி வளைக்காமல் தெளிவாகச் சொல்லவேண்டுமெனில் இதுதான் ஹிந்துவின் கேள்வி.

‘ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்துக்கு நாங்கள் அனுசரணையாக இருந்திருக்கிறோம். அதில் பெரிய அளவிலான பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கவில்லை’ – இது ரணில் விக்கிரமசிங்கவின் சுருக்கமான மழுப்பலான பதில்.

ரணிலின் பதிலை விரிவுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியம்.

‘போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய விசாரணை தேவை – என்கிற தீர்மானத்தை நாங்களும் சேர்ந்தே கொண்டுவந்தோம். சர்வதேசத்துக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை’ – ரணிலின் பதிலுக்கு இதுதான் நேரடி அர்த்தம்.

ரணிலிடம் ஹிந்து கேட்டிருக்கும் முப்பது கேள்விகளில் இந்த ஒரே கேள்விதான் போர்க்குற்ற விசாரணை தொடர்பானது. அதுவும் இரண்டே வரிக் கேள்வி. அதுவும் ரத்தினச் சுருக்கமாக முடிந்துவிடுகிறது. அதற்குக் காரணம் ஹிந்துவின் சார்பில் கேள்வி கேட்டிருப்பவர் – ‘ஸ்ரீலங்காவுக்கு செய்த அளப்பரிய சேவைக்காகவே’ லங்கா ரத்ன விருது பெற்ற திருவாளர் என்.ராம். அவரது அந்தச் சேவை இன்னும் முடிவடைந்துவிடவில்லை போலிருக்கிறது.

ரத்தினச்சுருக்கமாகக் கேள்வி எழுப்ப என்.ராம் என்ன திருவள்ளுவரா? மைலாப்பூரிலேயே படித்திருந்தாலும் கூட அப்படி ஆகிவிட வாய்ப்பேயில்லை. திருவள்ளுவர் கையிலிருந்த எழுத்தாணி நேர்மையானது நடுநிலையானது. ராமின் கேள்வியிலிருக்கிற ஒவ்வொரு வார்த்தையிலும் விஷம் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழனை மடியில் படுக்கவைத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றிமாற்றி அதை ஊட்டுகிறது – ஹிந்து.

26வது மைலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விமானங்கள் மூலம் அந்த அப்பாவி மக்கள் மீது குண்டுமாரி பொழிந்திருக்கிறது இலங்கை. சர்வதேசம் என்கிற ஜடத்தைப் பற்றிக் கவலையேபடாமல் பாஸ்பரஸ் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிடக்கூட மனம் வரவில்லை – ராம் போன்ற மேதாவிகளுக்கு! ‘போர்க்குற்றம்’ என்கிற போலி வார்த்தையால் அழுகிப்போன இலங்கையின் பின்பக்கத்துக்குப் புனுகு பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவாளர் ராம் சாதாரண நிருபரல்ல! பத்திரிகையுலக ஜாம்பவான்களில் ஒருவர். ‘சர்வதேசம் ஒரு பிரச்சினையாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை’ என்று ரணில் விக்கிரமசிங்க சொன்னதும் ‘சர்வதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை ‘நீங்கள்’ மறந்துவிட்டமாதிரி சர்வதேசமும் மறந்துவிட்டது என்று சொல்கிறீர்களா’ என்று திருப்பிக் கேட்டிருக்க வேண்டாமா? இதைக்கூட பட்டென்று கேட்கத் தெரியாத ஒருவர் இவ்வளவு மெனக்கெட்டு கொழும்புக்கே போய் இப்படியொரு பேட்டி எடுத்திருப்பது எதற்காக யாருக்காக?

சிங்களப் படையின் பாலியல் வன்முறைகளையும் கொலைவெறியையும் சேனல் நான்கின் கல்லம் மேக்ரே மாதிரி ஹிந்து ராம் அம்பலப்படுத்த வேண்டாம்….
முள்ளிவாய்க்கால் வரை கொன்று புதைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர் நியாயம் கேட்கவேண்டாம்….

நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கிற அயோக்கியத்தனத்தை இந்த அளவுடன் ராம் நிறுத்திக் கொண்டால் போதும்……
சொந்தத் தாயகத்துக்கு விடுதலை கேட்ட ஒரே குற்றத்துக்காக விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்ட எமது மக்களுக்குச் செய்கிற தொடர் துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால் போதும்….!

லங்கா ரத்னா விருதுக்கான விலையாக தனது சுயமதிப்பு சுயகௌரவம் மனசாட்சி தொழிற்பண்பு – என்று தனக்குச் சொந்தமான எதை வேண்டுமானாலும் இலங்கைக்கு ராம் அர்ப்பணிக்கலாம். தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் எழுதிக் கொடுக்கலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய விருதுக்கு விலையாக எம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்க உண்மைகளை மூடிமறைக்க ஹிந்து ராம் யார்?

நிர்பயா என்கிற டெல்லிச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு நாடே கொதித்தெழுந்த போது தாங்களும் கொதிப்பதாகத்தானே காட்டிக்கொண்டார்கள் ஹிந்துவும் ராமும்…..
நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கும் இசைப்பிரியா என்கிற எங்கள் தமிழ்ச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமைக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டார்கள் இவர்கள்?

நிர்பயாவைச் சீரழித்தவர்கள் பொறுக்கிகள் என்றால் இசைப்பிரியாவைச் சீரழித்தவர்கள் சிங்கள ராணுவப் பொறுக்கிகள்… இதைத்தவிர வேறென்ன வித்தியாசம்?

எங்கள் இசைப்பிரியாவுக்கு நீதிகேட்பதில் கல்லம் மேக்ரே என்கிற பிரிட்டிஷ் பத்திரிகையாளனுக்கு இருக்கிற உறுதிகூட இவர்களுக்கு இல்லையே….. ஏன்?

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்வோம் – என்று இவர்கள் கூசாமல் பேசுவதால்தான் இவ்வளவையும் கேட்க வேண்டியிருக்கிறது.

1987லேயே பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்ட செய்தியை சந்தோஷம் பொங்க வெளியிட்டது ஹிந்து …. அது பத்திரிகை தர்மமோ இல்லையோ… அவர்களது ஹிந்து தர்மம்.
அதைக் குறித்து நாம் கேள்வி கேட்கவில்லை.

ஆனால் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்பது தெரிந்த பிறகு அப்படியொரு பொய்ச் செய்தியை வெளியிட்டமைக்காக ஹிந்து என்கிற பாரம்பரியமிக்க நாளேடு ரெண்டுவார்த்தை மன்னிப்பு கேட்டிருக்கவேண்டாமா? தெரியாமல் போட்டுவிட்டோம் – என்றோ ஹரிஹரன் சொன்னதை நம்பிப் போட்டுவிட்டோம் – என்றோ எழுதி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா?

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம் அது பொய்யென்பது தெரிந்தபிறகு மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டோம் வருத்தம் கூட தெரிவிக்க மாட்டோம் – என்கிற ஒரு செய்தித்தாளின் மனநிலை அதன் வாசகர்களுக்கு அது இழைக்கிற பச்சைத் துரோகம். வேறெந்தப் பெயரில் அதை அழைப்பது?

இந்தப் பச்சைத் துரோகத்தை ஹிந்துவும் ராமும் இன்றுவரை தொடர்கின்றனர் என்பதற்கான வலுவான ஆதாரம் ரணில் பேட்டி.

ஒரு பேச்சுக்கு இனப்படுகொலையைப் போர்க்குற்றமென்றே வைத்துக்கொள்வோம். அதைப்பற்றி விசாரிக்க சர்வதேசத்தின் பங்களிப்போடு கூடிய நடுநிலையான விசாரணை – என்பதுதானே ஜெனிவா தீர்மானம். அதைத்தானே ஆதரித்தது இலங்கை. ‘எங்கள் அனுசரணையுடன்தான் அது கொண்டுவரப்பட்டது’ என்று ரணில் குறிப்பிடுவது அதைத்தானே! அப்போது ‘இலங்கையின் இந்தத் துணிவான முடிவு வரவேற்கத்தக்கது’ என்று பாராட்டியவர்கள் அந்தத் தீர்மானத்தைக் குப்பைக்கூடையில் எறிந்திருக்கும் இலங்கையின் நம்பிக்கைத் துரோகத்தைக் கண்டிக்க வேண்டுமா வேண்டாமா?

அதைச் செய்யாமல் ‘இவ்வளவு சாமர்த்தியமாக சர்வதேசத்தை ஊமையாக்கினீர்களே எப்படி’ என்று ரணிலையும் மைத்திரிபாலாவையும் பார்த்து காதலாகிக் கசிவது என்ன நியாயம்?

ஒட்டுமொத்தப் பேட்டியில் சர்வதேச விசாரணை தொடர்பான ஒரே ஒரு கேள்விக்கும் ரணில் மழுப்பலாகப் பதிலளித்திருக்கும் நிலையில் அதற்கு விளக்கம் கேட்காதது பத்திரிகை அதர்மம். ராம் தவிர வேறு யாரேனும் ரணிலைப் பேட்டி கண்டிருந்தால் அறிவுக்கூர்மையின்மையால் அந்த வாய்ப்பைத் தவற விட்டிருக்கக் கூடும் என்று நினைத்துத் தொலைத்திருக்கலாம். ராம் அறிவாளி. அறிவுக் கூர்மையில்லாதவர்களைக் காட்டிலும் அயோக்கிய அறிவாளிகளே ஆபத்தானவர்கள் என்கிற காந்தியப் பார்வையுடனேயே திருவாளர் ராமைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ரணிலை லங்காரத்ன ராம் பேட்டியெடுத்திருக்கிற காலப்பகுதி ஐந்தாறு ஆண்டுகளாக இலங்கையையே உலுக்கிக் கொண்டிருக்கிற இரண்டு பத்திரிகையாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நிறைய உண்மைகள் வெளியாகிக் கொண்டிருக்கிற காலப்பகுதி. அந்த இருவரின் படுகொலைகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற அதிபர் மைத்திரிபாலா தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற காலப்பகுதி. ஒருவர் – லசந்த விக்கிரமதுங்க. இன்னொருவர் – பிரகீத் ஏக்னலிகோட.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம் போல இல்லாமல் சிங்களவர்களான லசந்தவும் பிரகீத்தும் தமிழினப்படுகொலையைக் கண்டித்தவர்கள் ராஜபக்சவைத் தட்டிக் கேட்டவர்கள். உண்மை பேசியதற்காகக் கொல்லப்பட்ட அந்த சக பத்திரிகையாளர்கள் குறித்தாவது ராம் கேட்டாரா என்றால் இல்லை. ஒரே ஒரு வார்த்தை கூட அதைப்பற்றிக் கேட்கவில்லை.

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை குறித்த கேள்வியைப் பூசி மெழுகிக் கேட்டது ராம் செய்த இனத்துரோகம் என்றால் லசந்த குறித்தும் பிரகீத் குறித்தும் கேட்கவே கேட்காதது தான் செய்கிற பத்திரிகைத் தொழிலுக்கு அவர் செய்திருக்கிற மன்னிக்க முடியாத துரோகம்.

ராமுக்கு இதெல்லாம் புதிதல்ல! ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த ரத்தக் கறையோடு நின்றிருந்த மகிந்த ராஜபக்சவை புத்தனாகவே காட்ட ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்து வெளியிட்ட ‘மகிந்த சஷ்டி’ இப்போதும் நினைவிருக்கிறது எனக்கு! (ராம் எடுத்த அந்தப் பேட்டி சஷ்டிக்கவசம் மாதிரிதான் இருந்தது.)

உடல்திமிரெடுத்த பொலிகாளையைப் போல் ‘எங்கள் நாட்டுக்குக் கலப்பினம்தான் பொருத்தமானது’ என்று மகிந்தன் சொல்ல அதை ஒரு வார்த்தை கண்டிக்காமல் ரசித்துக் கொண்டிருந்த அதே ராம்தான் ‘சர்வதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில் போடுவதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று ரணில் பேசுவதை ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு வந்து ஹிந்துவில் குப்பை கொட்டுகிறார்.

பாரதி சாடியதைப் போல் ஈரத்திலேயே உழல்கிற தமிழனுக்கு இது உறைக்கப் போவதில்லை. தமிழனுக்கு இதெல்லாம் உறைக்காத வரை பத்திரிகையுலக ஜாம்பவான்கள் எவரும் உண்மையை உரைக்கப் போவதில்லை. ராம் மாதிரி நாமும் ‘லங்கா ரத்ன’ ஆக முடியாதா – என்கிற அரிப்பு இருக்கிற வரை எந்தக் காவல் நாயாவது விருது பிஸ்கெட்டைப் கையில் வைத்திருக்கிற திருடனைப் பார்த்துக் குரைக்கப் போகிறதா என்ன?

இளம் வயதில் திருவாளர் ராம் ரஞ்சிக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியின் விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். மகேந்திரசிங் தோனி மாதிரி. அவரைப்போல் இவரும் ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடித்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. எழுபது வயதைக் கடந்தபிறகு அதை அடிக்கிறார். எரிச்சலாக இருக்கிறது நமக்கு! ஏனென்றால் இப்போது அவர் தமிழ்நாடு அணியில் இல்லை. அதைவிடக் கொடுமை சிங்களக் கொலைவெறி அணியோடு சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது! இதை எப்படி மன்னிப்பது?