உலக வாழ் தமிழ் மக்களுக்கு ஸ்டாலின் தலைவராக செயற்பட வேண்டும்! – செல்வம் அடைக்கலநாதன்

348 0

நடந்து முடிந்த தமிழக மாநில அவை தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், முதலமைச்சராகப் பதவியேற்கும் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியீட்டி இருப்பது, தமிழக மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும், எதிர்பார்ப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கும் தாங்கள் தமிழக மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவராகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் உங்களுடைய வெற்றியை எமக்கான பலமாகவே கருதுகிறோம். முதலமைச்சராக உங்கள் மகத்தான பணி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.