வடக்கில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று – மருத்துவர் கேதீஸ்வரன்

338 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று இன்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 454 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 25 பேருக்குக் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 7 பேரும், மன்னார், வவுனியா மாவட்டங்களில் தலா 4 பேரும், முல்லைத்தீவில் மூவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்குக் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேரும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருமாக 5 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வவுனியா பொதுச்சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. பூவரசம் குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்ற தலா ஒரு நோயாளிக்குத் தொற்று கண்டறியப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றார்.