முள்ளிவாய்க்கால் ! ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்த துயரப் பதிவு.

487 0

முள்ளிவாய்க்கால் !
உலகப் போரியல் வரலாறில் பதிவான
தமிழினப் படுகொலையின் அடையாளம் …

ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆழ்மனதில்
ஆழமாய் பதிந்த துயரப் பதிவு …

சுயநலத்தின் உச்சம் தலைக்கேறிய
உலக வல்லரசுகளும்
சிங்கள இனவெறியும்
சேர்ந்து நடத்திய
இனவெறியாட்டத்தின் உச்சம் …

கந்தகத் தீப்பொறியை
சுற்றிவளைத்து நகர்த்தி
முன் தோன்றிய மூத்த குடியின்
வேரையும் , சுதந்திர உணர்வையும்
கருக்கி மகிழ்ந்த
மனிதம் கொன்றவர்களின்
இழிசெயல் நடந்தேறிய கொடிய நேரம் …

உலக போரியல் சட்டத்தை
சாக்கடையில் தள்ளிவிட்டு
கொத்துக் கொத்தாய்
நச்சுக் குண்டுகளை போட்டு
மக்களையும் ,போராளிகளையும்
தமிழீழ வளங்களையும்
அழித்த தீ பரவிய நேரம் …

நியாயங்கள் புதைகுழிக்குள்
மூழ்கடிக்கப்பட்டு மூடப்பட்ட நேரம் …
அநியாயத்தின் கொடிய முகம்
தலைவிரித்தாடிய கோரத் தாண்டவம் …

இது வரிகளுக்குள் வசப்படாத வலி …
ஒவ்வொரு கணப்பொழுதும்
ஒவ்வொரு யுகமான மணித்துளிகள் …
இது போரின் முழு கொடுமைகளையும்
ஒன்று திரட்டித் தந்த கொடிய அனுபவம் …

நெஞ்சம் மறக்காத வலிய வடு
இது உலகம் ஒன்று சேர்ந்து செய்த
தமிழினப்படுகொலை .

அகரப்பாவலன்.