மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை பலி

275 0

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் கலாசாலை வீதி- பாரதிபுரத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்தார்.

நேற்றிரவு வீட்டுக்கு மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற குடும்பத்தலைவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார். வைத்தியசாலையில் பணியாற்றும் மனைவி வீடு திரும்பிய போது தகாத வார்த்தைகளால் தந்தை திட்டியதால் ஆத்திரமடைந்த மகன் ஒருவன் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

அத்துடன், மைத்துனர் ஒருவரும் அவரைத் தாக்கியுள்ளார்.

நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குடும்பத்தலைவர் அசைவற்றுக் கிடந்துள்ளார்.

காலையில் அவர் உயிரிழந்தமை தெரிய வந்தததை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் கோப்பாய் பகுதியில் பற்றைக் காணியில் மறைந்திருந்த பிரதான சந்தேக நபரான மகனை பொலிஸார் கைது செய்தனர்.

மற்றொரு மகனும், மைத்துனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிவான், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.