கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை- கிளிநொச்சியில் பரபரப்பு

280 0

கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிழக்கு பகுதியிலுள்ள கிராமத்திற்குள், இன்று (சனிக்கிழமை) காலை திடீரென நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள், சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் வசிக்கும் நாகராஜா செந்தில்குமரன் என்பவரது குடியிருப்புக்குள்ளேயே இன்று காலை சிறுத்தை நுழைந்துள்ளது.

இதன்போது வீட்டிலிருந்த அவரது வளர்ப்பு நாய், வழமைக்கு மாறாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதற்கு அமைவாக சுற்று சூழலை முழுமையாக அவதானித்துள்ளார்.

அப்போது சிறுத்தை அச்சத்தின் மத்தியில் மரத்தின் மீது ஏறி இருப்பதை கண்ட அவர் படையினருக்கு  உடனடியாக தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய அப்பகுதிக்க சென்ற படையினர், சிறுத்தையை அவதானித்ததுடன்,  சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வருகை தந்த வன ஜீவராசி திணைக்களத்தினர்,  நீண்ட முயற்சியின் பின்னர் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

குறித்த சம்பவத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.