அல்வாய் கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

209 0

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத்தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் இருதரப்பிலும் நால்வர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் தேடப்படுகின்றனர்.

அவர்களில் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.

அல்வாயில் நேற்று பிற்பகல் இரு பகுதியினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகராசா கௌசிகன் (வயது 31) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

அல்வாய் வடக்கு முத்துமாரி அம்மன் கோவிலடியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிந்தது.

சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

சிகிச்சை பெற்றவர்களில் இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் மேலும் இருவர் கொல்லப்பட்டவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் எனவும் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்