ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

187 0

முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

வருகிற (25-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும்.

இந்த பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்த திருமணங்களையும் நிறுத்தவேண்டியது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதன்படி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

முகூர்த்த நாட்களில் கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். ஒரே நாளில் பல திருமணங்கள் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். எனவே அதிகமானோர் கூடுவதை தவிர்க்கவே கோவில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த திருமணங்களை திட்டமிட்டப்படி நடத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். அவர்கள் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு திருமண நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டு உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே ஒரு திருமணத்துக்கு 20 பேர் வீதம் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களுக்கு கோவில்களுக்கு சென்று வழிபட, பூஜையில் பங்கேற்க அனுமதி இல்லை.