மன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது

162 0

 

யாழ்ப்பாணத்தில் இருந்து 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளை மன்னாரிற்கு கடத்தி வந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சள் கட்டி மூடைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனம் ஒன்றில் கடத்திவரப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட குறித்த 5 பேரும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரனைகளின் பின்னர் மீட்கப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 5 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.