நாட்டில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத அச்சமான சூழல் -ரிஷாத்

207 0

இந்த நாட்டில் என்ன நடக்கும் எப்போது நடக்கும் என்று எவருக்கும் தெரியாத அச்சமான சூழலை அரசு ஏற்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு நேற்று விஜயம் செய்த அவர் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-

எப்படியாவது என்னை சிறையிலே அடைக்க வேண்டும் என்று எத்தனையோ பொய்க் குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகளைச் செய்தும் பலன் கிடைக்காதபோது, மன்னாருக்கு வாக்காளர்களை பஸ்ஸில் அழைத்துச்சென்ற விடயத்தை முன்னிறுத்தி என்னைச் சிறையிலேயே அடைத்தார்கள்.

அதன்பிறகும் தொடர்ச்சியான சதிகளை இந்த அரசு செய்து கொண்டேயிருக்கின்றது. குறிப்பாக கொரோனா தொற்று நோயினால் இறப்பவர்களின் சடலங்களை பலவந்தமாக எரிக்கும் சதியை இந்த அரசாங்கம் செய்தது.

எமது கருத்துக்களையும், மக்களின் வேதனைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.ஜெனிவாவால் அந்த விடயம் இடைநிறுத்தப்பட்டது.

அதன்பிறகு சிறுபான்மைச் சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும் சதி நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த மாதம் அசாத் சாலியை கைது செய்தார்கள். அதேபோல அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளை எதிர்த்து பேசுகின்ற அசேல சம்பத் என்ற சிவில் அமைப்பை சேர்ந்தவரை கைது செய்திருப்பதாக அறிகிறேன்.

இந்த நாட்டில் என்ன நடக்கும் எப்போது நடக்கும் யாருக்கு நடக்கும்? என்ன செய்வார்கள் என்பது தெரியாது. அனைவரும் ஒரு பயந்த சுபாவத்தோடு வாழவேண்டும் என்று இந்த அரசு அச்சத்திலே வைத்திருக்கின்றது.

கொழும்பைவிட்டு செல்லமுடியாத அளவுக்கு பலவகையான தொல்லைகள் எங்களுக்கு வழங்கப்பட்டன.

அந்தவகையில் நான் சிறையில் இருந்தபோது எனக்காக மன்றாடிய அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக கடமைப்பட்டுள்ளேன்-என்றார்.